Thursday, 30 June 2016

ஓங்கிய கர்ஜனையும் அடங்கிய குரலும்

ர் எழுத்தாளர்  முதலில் வாசகனாகத்தான்  வளர்கிறார். நான் யாரையும் வாசித்ததே இல்லை என்று கம்பீரக்குரல் கொடுத்துத்தம்மை தனிப்பிறவி என்று காட்டிக் கொள்ள ஒரு ஸ்டார் வால்யூவுக்காக வேண்டுமானால் ஒருவர் கர்ஜித்துப் பார்க்கலாம். ஆனால்  நாம் என்ற சமூக உறுப்பினர் அனைவரும் ஒரு சமூகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு சமூகம் நெருக்கித்தள்ளுகிற  ஒருபண்பாட்டுத்  தள்ளுமுள்ளுவில் இருந்துகொண்டே தான் வாழ்கிறோம். கண்களை மூடிக்கொண்டு ,மூக்கைப் பொத்திக்கொண்டு, காதுகளை மூடிக்கொண்டு  காந்திஜியின் மூன்று குரங்குப் பொம்மை ஸ்டைலில் நாம் ஒதுங்கிச் சென்றால் கூடக் காலச் சுழல் நம்மைச் சுற்றி இழுத்துச் செல்கிறது.
நமது தந்த கோபுர வாசம்  நிலையாகி விடுவதில்லை. அடிக்கடி தரைக்கு இறங்கி வரவேண்டி இருக்கிறது. நல்ல வாசகராக உருவாகிற பயிற்சியில் நம்மை அறியாமல் நாலையும் படிக்க நேரிடுகிறது. அப்படி வாசிக்க நேரும்போது  நம் மனப்பான்மை அல்லது சொந்தபண்புகள் நமது சொந்த வார்ப்பை உருவாக்குகின்றன. அந்த வார்ப்பு , புதிய வார்ப்பா அல்லது பழைய  வார்ப்பா என்பது நாம் வாசித்து ரசித்தவற்றை மதிப்பிடுவதைப் புலப்படுத்தும் போது வெளியாகி விடும்
திலீப்குமார் என்ற வாசகர் விமரிசன ரீதியாக ஆர்.சூடாமணி என்ற எழுத்தாளரைப் பற்றி தொகுப்புரையில் மதிப்பிடும் போது ..
"....சூடாமணி,வெகுஜன இதழ்கள் என்று கூறப்படும் பெரிய பத்திரிக்கைகளில் எழுதியதோடு ’தீபம்’, ’கணையாழி’, ’ஞானரதம்’, ’சதங்கை’, போன்ற இலக்கிய சிற்றிதழ்களிலும் அவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். அவர் துவக்கத்தில் சில நாவல்களை எழுதியிருந்தாலும், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ’சிறுகதை’யென்ற வடிவத்தையே பெரிதும் சார்ந்திருந்தார் என்று கருதலாம். எழுத்துலகில் இன்றும் அவர் ஒரு சிறுகதையாசிரியராகவே அடையாளம் காணப்படுகிறார்.
..இதில் ஓங்கிய கர்ஜனையும் ஜெயகாந்தனையும், அடங்கிய  குரலும் சூடாமணியையும் இனம் காணலாம். சூடாமணியின் படைப்புலகத்தை இந்தக் கூற்றின் ஒளியில் தான் நாம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சூடாமணியின் பெரும்பாலான சிறுகதைகள் அதிகம் விற்பனையாகும் பெரிய பத்திரிக்கைகளில்தான் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக, வெகுஜனப் பத்திரிக்கைகளில் வெளியாகும் சிறுகதைகள்  வாழ்க்கைக் குறித்த மேலோட்டமான பார்வைகளையே முன்னிறுத்துகின்றன ... சமூகப் பண்பாட்டு முரண்களின் மையப்புள்ளிகளை இவை தொடுவதே இல்லை....  எழுத்து முறையிலும் கூட, சுவாரஸ்யமோ தேர்ச்சியோ காணப்படுவதில்லை... என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்துள்ளன.  இதன் காரணமாக சூடாமணியின் கதைகளின் இலக்கியப் பண்புகள் குறித்து ஒருவித அலட்சியமும் தெளிவின்மையும் நிலவி வருகிறது.  சூடாமணி அவ்வப்போது சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்திருந்தாலும், தமிழின் ”இலக்கியப் பிரமுகர்கள்” அவரது கதைகளை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியே வந்திருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இத்தகைய புறக்கணிப்பு  நியாயமற்றதும் சற்றே மிகையானதும் கூட. 
சூடாமணி, எழுதத் துவங்கிய காலம் முதலே தன்னை சமூக பிரக்ஞையும், நுண்ணுணர்வும் மிக்க ஒரு படைப்பாளியாக நிறுவி வந்துள்ளார்.  தனது வரையறுக்கப்பட்ட சூழலையும் மீறி, மனித உறவுகளின் பல்வேறு நிலைகள் குறித்து அவருடைய அக்கறைகளையும், ஆதங்கங்களையும் நம்பகத்தன்மை மிகுந்த , அந்தரங்கமான ஒரு தொனியில் தொடர்ந்து அவர் முன்வைத்து வந்துள்ளார்.  
சூடாமணி பரந்த வாசிப்பைக் கொண்டிருந்தார் என்றாலும், உரைநடையின் எல்லா சாத்தியக்கூறுகளையும்  பரிசீலித்தார் என்றோ பரிசோதனை ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டார் என்றோ கூறமுடியாது.  நவீனத்துவம் தமிழில் முகிழ்க்கத் துவங்கியதற்கு முன்பு தனது எழுத்து முறையை வடிவமைத்துக் கொண்டவர் என்ற வகையில் அன்றைய தமிழ் சிறுகதையின் சம்பிரதாயத்திற்கு உட்பட்டே அவர் செயல்ப்பட்டார்..
சூடாமணியின் கதைகளில் சிறு குழந்தைகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், வாழ்க்கையில் அலுத்துப் போன நடுவயது பெண்கள், அரைக்கிழவிகள், மூதாட்டிகள், நல்ல மனமும் கள்ளமனமும் கொண்ட ஆண்கள், கனவான்கள், தோட்டக்காரர்கள் என்று ஏராளமானவர்களை பல்வேறு சூழ்நிலைகளில் நம்மால் பார்க்க முடியும்.  இப்பாத்திரங்களின் வாயிலாக மனித இயல்பின் பெரும்பாலான முரண்களை ஏளனம் தவிர்த்த, தணிந்த குரலில், பெருமளவு வெற்றிகரமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கதைகளின் கடைசி கட்டத்தில் பாத்திரங்கள் அடையும் மனமாற்றமும் பரிணாமமும் கூட நாடகத்தன்மையற்ற அடக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
கவிதை மற்றும் நாடகத்தோடு ஒப்பிடும்போது சுதந்திரம் குறைவான உரைநடையில் சற்றும் ஆயாசம் கொள்ளாமல் திடமான நம்பிக்கையுடன் செயல்பட்டது என்பது அவரது அக்கறைகள் கதை கூறலுக்கப்பாலும் வாழ்க்கையின் எளிய புதிர்களை நோக்கியே கவனம் கொண்டிருந்தன என்று சொல்லலாம். அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வரியும் மனித உறவுகள் குறித்த அவரது ஆழ்ந்த கரிசனத்தின் அடிப்படையில் உருவானதாகவே தெரிகிறது. தவிர, எச்சந்தர்ப்பத்திலும் சூடாமணி தன் கதைகளில் எதேச்சையாகக் கூட தன்னிரக்கம் கசிந்துவிட இடம் கொடுத்ததில்லை. இவ்வகையான கட்டுப்பாடும் பண்பும் அவரது மனவிசாலத்திற்கும், இலக்கிய நாணயத்திற்கும் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.     
                                                                     
திலீப்குமாரின் கையெழுத்து 
எந்த ஒரு மொழியின் சிறுகதை வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சிறுகதையின் வளர்ச்சிப் போக்குக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு நெருங்கிய உறவு இருப்பதைக் காணலாம்.  இதில் பெரிய பத்திரிக்கைகள், இலக்கிய பத்திரிக்கைகள் இரண்டுமே அடங்கும்.  சிறுகதையில் பரிசோதனை செய்யவும், நல்ல படைப்புகள் உருவாவதற்கும், இலக்கியப் பத்திரிக்கைகள் களம் அமைத்துத் தந்தன என்பதைப் போல, பெரிய பத்திரிக்கைகள் சிறுகதையின் நுட்பங்களை வரையறுத்து எளிமைப் படுத்தின என்பதே உண்மை. 1940களிலிருந்தே தமிழில் பெரிய பத்திரிக்கைகள் சிறுகதைக்கு ஆற்றிய பங்கைவிட ஏற்படுத்திய பாதிப்பே கணிசமானது.  இன்று வரையிலும் மேற்குறித்த இரண்டு வேறு வேறு பத்திரிக்கைத் தளங்களும் தம் தம் குணாம்சங்களை கறாராகவே பிரதிபலித்து வருகின்றன.  
1950இன் பிற்பகுதியில் சூடாமணி எழுதத்தொடங்கியபோது, தமிழ் சிறுகதை ஒரு குறிப்பிட்ட வளத்தையும் திசையையும் எட்டிவிட்டிருந்தது.  சுதந்திர இந்தியாவின் அபிலாஷைகளும் நம்பிக்கைகளும் கட்டுக்குலையாமல் மிளிர்ந்து கொண்டிருந்த காலம் அது. அதோடு, கல்கி, புதுமைப்பித்தன் என்ற இருவேறு தாரைகள் உருவாக்கியிருந்த கோடுகளும் தற்காலிகமாக மங்கத் துவங்கிய நேரம் என்றும் கூறலாம். அப்போது, சிறுபத்திரிக்கை உலகில் இன்று மதிக்கப்படும் எழுத்தாளர்கள் பலரும் கூட அவ்வப்போது பெரிய பத்திரிக்கைகளிலும் எழுதி வந்தார்கள். 
இந்த கிட்டத்தட்ட ”அபேத”  சூழ்நிலையில் தமிழ் சிறுகதை, வடிவத்தில் நவீனத்துவத் தின் சாயலும், மொழி பயன்பாட்டில் தமிழின் வசீகரமான வெளிப்பாடுகளும், உள்ளடக்கத்தில் எதார்த்தவாதத்தின் முனைப்பும் கொண்டு, மரபும் புதுமையும் கலந்த ஒரு விஷேச அனுபவமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது.  தனி மனிதன், குடும்பம், சமூக நீதி, ஜன நாயக மதிப்பீடுகள் என்று பல்வேறு அக்கறைகளை பிரதிபலிக்க உதவிய இந்த பாணி எழுத்துதான் நம்பத்தகுந்த உத்தியாகக் கொள்ளப்பட்டது. 
கண்ணன் பெருந்தூது (ஆ மாதவையா), சாப விமோசனம் (புதுமைப்பித்தன்), ஆற்றாமை (கு.பா.ரா), மாறுதல் (மௌனி), போன்ற கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழித்து தமிழ் சிறுகதை மீண்டும் இப்படி ஒரு தளர்ச்சியான கோலத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நிலை.  உள்ளடக்கத்தின் மேன்மையை முன்னிட்டு வடிவத்தின் நெகிழ்ச்சிக்கு சலுகைகள் அளிக்கவும் பெறவும் பட்டன. தமிழ் வாசகர்கள் மனதிலும் இவ்வகை சிறுகதைகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின.  நடுத்தர வர்க்கமும் கீழ்-நடுத்தர வர்க்கமும் வாசிப்பை நோக்கி முன் நகர்ந்த தருணமிது. இலக்கியத்தைக் துய்க்கும் சமூக மனம் இதில் உணர்வுப் பூர்வமாக பங்குபெறவும், எழுச்சி கொள்ளவும், இடமளிக்கும் வடிவமாக அது அமைந்திருந்தது. இந்த சிறுகதை மரபை எழுத்தாளர்கள் தான் உருவாக்கினார்கள் என்பதைப் போலவே இந்த சிறுகதை மரபும் கூட சில எழுத்தாளர்களையும் அவர்களது படைப்பு முறைகளையும் வார்த்தது என்று கொள்ளலாம்.  இந்த வகை எழுத்தின் குறிப்பிடத்தக்க பிரதிநிதிகளாக கு.அழகிரிசாமி, விந்தன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரைச் சொல்லலாம்.  

அவரது மிகச் சிறந்த கதைகளில் கூட தளர்ச்சியான, நுட்பம் குறைவான வரிகளை நாம் எளிதாக சுட்டிக் காட்டிவிடலாம். ஆனால் இத்தேர்ச்சிக் குறைவிற்குப் பின்னால் இயங்கும் ஒரு மாசற்ற எளிய மனதையும் கூட இத்தேர்ச்சிக் குறைவின் வழியாகவே தான் நாம் கண்டு கொள்ள முடியும்.  
சில ஆண்டுகளுக்கு முன்பு சூடாமணியின் “டாக்டரம்மா அறை” என்ற கதையை ஒரு தொகுப்புக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க எடுத்துக்கொண்டோம். அவரது,  மற்றும் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில், இதுவும் ஒன்று. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்ணின் கதை இது.  

. சூடாமணியின் கதைகளில் இவ்விரண்டு வகையிலான அத்துமீறல்களும் இல்லை.  அவரை இவ்விஷயத்தில் நடுவாந்திரத்தில் நின்ற ”நடுநிலையாளர்” என்றே அழைக்கலாம். வாசகனின் கற்பனை வளத்திற்கு அறைகூவல் விடும் மொழி சாகசம் அவரிடம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனாலும் ஒரு மாலை நடையின் ஆசுவாசம் அவர் கதைகளில் நமக்கு நிச்சயம் கிட்டும்.

சூடாமணி 50 ஆண்டுகளாகக் எழுதி வந்துள்ளார். அவரது எழுத்துக்குரிய மரியாதையும், கௌரவமும் பல சந்தர்ப்பங்களில் கிடைத்தும் அதை நேரடியாக எற்றுக் கொள்ளமுடியாத, மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு சூழலிலிருந்து அவர் இதை செய்தார். சுய இரக்கத்தின் கூட்டுக்குள் பதுங்கிக் விடாது,  எச்சூழ்நிலையிலும் சிறியதொரு கசப்புணர்வையும் வெளிக்காட்டாது , ’எழுத்து’ என்ற நடவடிக்கையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது.  எழுத்தாளர்களுக்கும் சரி, வாசகர்களுக்கும் சரி, இலக்கியம் என்பதே ஒரு அரூப வெளிப் பயணம்தான்.  இதில் அடையும் வெற்றிகளும் தோல்விகளும் கூட நிதர்சனமானவையல்ல.
சூடாமணி கதைகளின் பிரதான அம்சம் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்பு இது. இவ்வுலகம்,  நிம்மதியைக் குலைத்துவிடும் பேரழகுகளால் மட்டுமல்ல; மனம் விரும்பும் சிறு சிறு, சுமாரான அழகுகளாலும் கூட்த்தான் நிரம்பியுள்ளது.  இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையை தன் எழுத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி..."
இது திலீப்குமாரின் மதிப்பீடு. இங்கே அவர் தராசு எந்தவித போலிப் புனைவும் இன்றி அதே சமயம் எள்ளலோ கிண்டலோ தம் மேதமையை வெளிக்காட்டும் முயற்சியோ , கொடுத்த பொறுப்பை விட்டு லகுவாக நழுவும் சாமர்த்தியமோ இன்றி எடை போட்டிருக்கிறது
மதிப்பீடுகளை வைத்து ஒரு எழுத்தாளரை அவர் எப்படிப்பட்டவர் என்று மதிப்பிட அவரே இடமளித்து விடுகிறார்.
திலீப்குமாரின் இலக்கிய உணர்வுகள் என்னவென்று நாம் மேற்கண்ட தொகுப்புரை ஒன்றின் மூலம் வெகு எளிதில் உணர்கிறோம்[தொடரும்]


Tuesday, 28 June 2016

ரமா உமா சிறுகதைத்தொகுதி

சமீபத்தில் திலீப் குமார் வெளியிட்டுள்ள ரமா-உமா சிறுகதைத்தொகுதி வித்தியாசமானது 
                                                                         
திலீப்குமார் தம் அலுவலகத்தில் 
 தமிழ் இலக்கிய வானத்தை இன்னும் சற்று வெட்டிப்பிளந்து பண்பாட்டுக் கூடாரத்தின் ஜிப்பை விரியக் கிழித்து அகற்றி  மீண்டும் மூடுகிற படைப்பு ரமா உமாதொகுதி .சிறு,குறு,பெரு, அரு என்று எந்த லேபிள் உள்ள   பத்திரிக்கைப்பொட்டலத்தில் மடித்தாலும் ஜீவரசம் ததும்பும் தேங்காய்த் துருவல் தூவிய, பெருங்காய வாசனை உள்ள நல்ல கதை என்ற  பட்டாணிச் சுண்டல் ஒரே மாதிரி தான் மணக்கும்; காலத்தால் அப்படி ஒன்றும் ஊசிவிடாது, சிறு,குறு,அரு லிஸ்டில் எழுதுகிற நாங்களே மகரிஷிகள் என்று இனி பெருமை பாராட்ட முடியாதவாறு பெரும் பத்திரிகைகளிலும் சிறு பத்திரிகைச் சித்தர்கள் அடிக்கடி இடம் பிடிக்கிறார்கள் .பிடிக்க மனுப்போடுகிறார்கள் 
நல்ல பண்டம் எப்போதும் புதுமையாகச்  சுவைக்கும் என்பதற்குத் துல்லியமான எடுத்துக்காட்டு ரமா-உமா சிறுகதைத்தொகுதி. இது இலக்கிய விமர்சனமா சுண்டல் விமர்சனமா என்று சந்தேகம் எழலாம்.இத்தொகுதியில் உள்ள 'நா காக்க அல்லது ஆசையும் தோசையும்' என்ற 19ம் நூற்றாண்டுக்காரர்களின்  இலக்கியப் பண்பாட்டிற்கு ஏற்ப 'திலீப் குமார்' வேண்டுமென்றே கிண்டலாகத்  தலைப்பிட்டுள்ள சிறுகதையில் மிட்டு மாமா நடமாடிய சௌகார்பேட்டை ,ஜார்ஜ் டவுன் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களின் பட்டியல்,ஹோட்டல்களின்விவரமான சிற்றுண்டிப் பட்டியல்
[யாரோ அந்த மிட்டு மாமா , அவர் மீது ஒரு நேசம் கலந்த பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறார் திலீப்.ஜானகிராமன், புதுமைப்பித்தன்,கல்கி ஆகியோர் போல  இப்படி பாத்திரங்களோடு நம்மைப் பிணைக்கிற கலை தன்னை அறியாமல் திலீப் குமாருக்கு கைவந்திருக்கிறது, ரகசியம் ரொம்ப சிம்பிள் யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவர்களை திலீப் குமார் நேசித்தபடி எழுதுகிறார்.இங்கே குஷ்வந்த் சிங் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது .ஒரு பாத்திரத்தை எடுத்து விமர்சிக்கத் தொடங்கு; நல்ல எழுத்து பிறக்கும் என்று. திலீப்குமார்  விமர்சிப்பவர் அல்ல ; நேசிப்பவர். கடைசி கடைசியாக வாசக அனுபவத்தில் ஆகட்டும் ; வாழ்க்கை அனுபவத்தில் ஆகட்டும் கைக்கு மிஞ்சுவது நேசம் தான். நேசத்தின் பல டிகிரிகள் தான்.
மிட்டு மாமா காட்டும் சிற்றுண்டி சாலைகள் பலவற்றுடன் 1950முதல் 1955 வரை தொடர்பு கொண்டிருந்த என க்கு, அப்படி ஒரு உவமை தோன்றியது.அதற்குக் காரணம் திலீப்குமார்  சிறு பத்திரிகையில் எழுதியவர் என்ற முத்திரை விழுந்திருப்பது. அவர் தினமணி கதிரில் கூட எழுதியவர்.என்னைமாதிரி எந்தெந்த மடத்தில் சாப்பாடு என்று தேடி அலையாமல்,அலைச்சல் அவஸ்தை இல்லாமல் சொற்பமாக எழுதியவர். சொற்பமான-அவரே சொல்கிறபடி 300-400பேருக்கு மட்டுமே எழுதியவர்.
எந்தச்சிற்பி கோடானு கோடி ஜனங்களுக்கு என்று திட்டம் போட்டுக்கொண்டு ஜீவகளை யுள்ள சிற்பங்களைச் செதுக்குகிறார்? கல் கிடைத்து, உளி அமைந்து, கற்பனையின்  கர்ப்பவேதனை கூடும்போது அதுபாட்டுக்கு சிற்பம் தானாக உருப்பெறுகிறது
எனினும் முதல் கதையான ரமாவும் உமாவும் மாதிரி அபூர்வமான தமிழில் இதுவரை தோன்றியே இராத,தமிழ்ப் பண்பாடு காக்க வேண்டிய சான்றோர் கூடமுகம் சுளித்தாலும்  ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே உள் ளூர ரசிக்கும் , அற்புதமான குறுநாவல்
இது வரை நாம் அறியாத திலீப் குமாரை அறிமுகம் செய்கிறது.கதைப் பொருள் லெஸ்பியன் உறவு.அதுவே முதல் புதுமை . கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விலக்கி கதாசிரியனோடு நேரடியாகச் சச்சரவு செய்யும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஓர் மாற்றம் தருகிறது.லெஸ்பிய உறவின் ஆன்ம நேய அனுபவங்களை அதிலும் கூட காதல் முகிழ்த்து மலர்ந்து மாபெரும்  மலராக உணரவைக்கிறார். அநாயாசமாக சில்லென்று காலைத் தழுவும் கடற்கரை அலையின் நுரை வசனங்கள் ஓடுகின்றன." ஒரு நாள் கூட இப்படி யாரும் என்னை நேசித்ததில்லை.இப்படிக் கொஞ்சியதில்லை,இப்படி என்னை ரசித்ததில்லை. ஒருநாளில் இத்தனை முத்தங்களை நான் பெற்றதும் இல்லை."
இந்த வசனம் சொன்ன உமா.." இதுவரை  ஒரு திருடியைப் போல , ஒரு பிச்சைக்காரியைப் போல் தான் என் உடலை நான் அணுகியிருக்கிறேன்"
 என்கிறாள் [இதற்கு எந்த அட்ஜெக்டிவ் போட்டு ரசிப்பது அல்லது முகம் சுளி ப்பது உங்கள் சாய்ஸ்]
திலீப்குமார் ஒரு கவி.நிர்வாணமான இரு  திருமணம் கடந்த குழந்தை குட்டிகள் பெற்ற இரு மாதர்களின் நிர்வாணத் தழுவலில் புதைந்திருக்கும் கட்டுப்பாடற்ற உடலியக்கங்களை எளிய சொற்களில் சொல்லும் கவி. அங்கே கிட்டும் உணர்வின் அனுபவச்சுவைகளில் அவற்றின் அதன் ஏற்றத் தாழ்வுகளை திகட்டிவிடாமல் சொல்லின் ஜலஜலப்புகளே இல்லாமல் உன்னதமாக நமக்குப் பகிர்ந்து தருகிறார். அபூர்வம், அற்புதம்..உன்னதம்  என விமர்சன டிசிப்ளினே இல்லாமல் இப்படி அட்ஜெக்டிவ்களாக அள்ளிப்போடுவது குறித்து      ஹெமிங்வேவும் அவர் வாரிசுகளும் முகம் சுளிக்கலாம் .
எனக்குத் தோன்றுகிறது. நான் போடுகிறேன். நீங்கள் படித்தாலும் அப்படித்தான் போடுவீர்கள். கம்பன் சொன்னான் உணர்வெனும் பெரும்பதம் என்று. உணர்வு பொங்காமல் கலைச்சிருஷ்டி நெடுநாள் உயிர் வாழாது.
கதை சம்பிரதாயமான ரீதியில் பாரா பாராவாக இல்லாமல்  கிரேக்க ஐரோப்பிய நாடக பாணியில் கதை சொல்லி துவங்க, பாத்திரங்கள் உரையாடலில் நகர்கிறது
ரமா-உமாகதையில் உமா சொல்கிறாள்"இதன் சிறுமை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது".
ரமா-இதில் சிறுமை எங்கே வந்தது?
உமாவின் பதில் : எங்கோ ஒரு கடற்கரை விடுதியில் இரண்டு வளர்ந்த பெண்கள் அம்மணமான கணம் எப்படி மகத்தானதாக இருக்க முடியும்?
அதற்கு ரமாவின் பதில் : மகத்தானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது ஓர் அற்புதமான தருணம்.தத்துவ வெளியீடே இல்லாமல் ஒரு செதுக்குச் சொல்லோவியம் தீட்டுகிறார் திலீப் குமார்
"சிலசமயம் வாழ்க்கையை நாம் வாழவேண்டும்,பலசமயம் அது நம்மை வாழ்ந்து விடும்"
புட்டம் பெரியதாக , உடம்பு குண்டாக இருப்பதற்காக ஜிம்முக்குப் போ என்று கணவனால் கட்டாயப் படுத்தப்பட்ட பெண் ஜிம்முக்குப் போனால் "என்ன மேடம் இதற்காகவா இங்கு வந்து சேர்ந்தீர்கள்-குஷ்பூ மாதிரி. எங்களோடு ஒப்பிட்டால் உங்கள் பின்புறம் ஒன்றுமேஇல்லை. எங்களுக்குப் பாருங்கள் எவ்வளவு பெரிசாக இருக்கிறது ஊறுகாய் ஜாடி மாதிரி" என்று அங்கே மற்ற பெண்கள் கேலி செய்கிறார்கள்
அதற்கு அவர் மாமியார் ரியாக்ஷ ன் வேறு மாதிரி.
"ஆண்களின்  சுபாவமே விசித்திரமானது.அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றே புரியாது.பாடாய்ப் படுத்திவிடுவார்கள்....நல்லவேளை இவனவாவது உனக்குக் காசு கொடுத்து ஜிமமுக்குப் போ " என்கிறான். இப்படி ஒரு எண்ணம் உன் மாமனாருக்குத் தோன்றி இருந்தால் அவர் என்னை வீட்டிலேயே பஸ்கி போடவைத்திருப்பார்."
ரமா, உமா இருவரும் பேச்சுக்கு அப்பால் மொழி கடந்து பேசும் குறியீட்டு மொழியில்  திலீப்குமார், நம்மை நேரடியாகக் களத்தில் கொண்டு போய் நிறுத்தும் டெக்னிக்கில் வெற்றி காண்கிறார்.
உ-ம்
உமா:வேண்டுமானால் நீ என் மடியில் படுத்துக்கொள்.
ரமா: ஏன்?
உமா: என்ன ஏன்?
ரமா:எனக்குத் தெரியும். எதற்குச சொல்கிறாய்?
உமா:எதற்கு?
ரமா: நல்லவலாட்டம் நடிக்காதே.
உமா: நான் சும்மா தான்.. பாசத்தோடு தான் சொன்னேன்.
ரமா: உன் பாசத்தைப் பற்றி எனக்கா தெரியாது?
உமா: ஒழிந்து போ.
கதாசிரியனாக திலீப் குமாரே தோன்றி கதாபாத்திரங்களால் கேள்வி கேட்கப்படுகிறார்.
"நாங்கள் ஏன் தமிழ்க் கதையில் குஜராத்திகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம் ?"
கதாசிரியரின் பதில்: சௌகார்பேட்டை குஜராத்திக் கிழவிகளையும் கிழவர்களையும் வைத்துக் கதை எழுதிப்பிரபலமானவன் நான். அதற்காகப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள்; சினிமாப்படமும்  எடுத்திருக்கிறார்கள்.என் வாசகர்களுக்குக்குஜராத்திப் பாத்திரங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்...  தமிழ்ப் பெண்களின் ஒழுக்கமும் நன்னடத்தையும் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது வழக்குப் போட்டாலும் போடுவார்கள் .
வாழ்க்கையின் குரூர நிஜங்களை திலீப் குமார் மிகவும் கூர்மையாகக் கவனித்து பெண்களின் வாயிலாகவே ஒரு தீர்ப்பையும் வழங்குகிறார்.
உதாரணம்,:
உமா: ஒரு விஷயம் கவனித்தாயா?உலகின் எல்லா மொழிகளிலும் பெரும்பாலான எல்லா வசைகளும் பெண்களின் பிறப்புறுப் பைச் சிதைப்பதைப் பற்றியே இருக்கின்றன. இந்த வன்மம் ஏன்?எப்படி?
ரமா:பெண்களின் யோனியைக் குறித்து எல்லா மொழி ஆண்களுக்கும் பதற்றம் தான்.ஒரு பெண்ணின் யோனியின் வீரியமும் ,கலவியின் பொது அதன் நுட்பமும் தான் அவர்களது ஆழ் மனதில் இவ்வளவு குரூரத்தை விளைவிக்கிறது.
உமா: உண்மை தான். ஒரு பெண்ணின் காமப் பரவசம் அலை அலையாக வந்து கரையைத் தொட்டுத் தொட்டு விளையாடும் கலைப் போன்ற லயம் கொண்டது.ஆனால் அவர்களுடையது நாய் ஒன்றுக்குப் போவது போல நொடியில் முடிந்து விடும் விஷயம்.அதனால் தான் இந்த ராஸ்கல்களுக்கு, நம் மீது இவ்வளவு பொறாமையும் பொச்சரிப்பும்.
இப்படி பெண்மனத்தின் ஆழங்களில் திலீப் குமார் சஞ்சரிக்கும்போது குறுநாவல் வாசிக்கிற அனுபவத்திற்கு அப்பால் நம் சித்தம் வேறு திசையில்
பயணம் போகிறது.
கதையை வாசிக்கிற வாசகனே அறியாத உண்மைகளை இரு கதாபாத்திரங்களும் கூறுகின்றன
கதையில் 30 இடங்களுக்கு மேல் அவர்கள் மௌனமாக இருந்தது ..கதையின் துல்லியத்தன்மையை வரையறுக்காமல் போனது..இப்படி எல்லாமே இதன் மிகைத்தன்மையை மழுப்புவதற்காக என்று குற்றம் சாட்டுகின்றன.
அதற்கு கதாசிரியர் என்ன பதிலளிக்கிறார்? இதை என் வாயிலாக ஓசியில் கேட்டுக்கொள்ளாமல் நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கதையை திலீப் குமார் மிகுந்த சாமர்த்தியத்தோடு முடித்திருக்கிறார்...
எப்படி?
நல்ல கதைகள் எல்லாம் உரிய நேரத்தில் எழுத்தாளர்களால் கைவிடப்பட்டவையே என்று கூறி.
அப்புறம்?
பிரயாசையே இல்லாமல் வாசிக்க வைத்து இலக்கியம் என்பது என்ன செய்ய வேண்டுமோ பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமூகக் கொடுமைகளின் சீறு குரல்கள் என்ற ஐட்டங்கள் இல்லாமல் நமக்குள் சில்லென்று நுழைந்து ஒரு ஆட்டு ஆட்டி வைக்கிறார்.
இலக்கியம் குஜராத்தி துப்பட்டா போட்டு வந்தாலும் தமிழ்ப் பாவாடை தாவணி கட்டி வந்தாலும் இலக்கியம் தான். இதோ தமிழ் மொழிநடை, காட்சி அமைப்பு,நேரடிவ் டெக்னிக் என்று பலவகைகளில் மாறுபட்டு முத்திரை பதித்துள்ள தொகுதி.காலத்தைப்பற்றி எக்கச்சக்கமான கேள்விகள் உள்ள நூல் இது. பதில் காண்பதா? விவாதிப்பதா?உங்கள் இஷ்டம்.
ஆனாலும் ஒரு கேள்வி.திலீப்குமார் தன் குஜராத்தி ஐடென்டிடியை அடிக்கடி ஏன் காட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது.
எழுதுகிறவர் குஜராத்தியாகவே ஏன் ஒதுங்கி நிற்கவேண்டும்?
கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட விட்டல் ராவ், மலையாளியான ஜெயமோகன், தெலுங்கர்களான அசோகமித்திரன்,கி.ராஜநாராயணன், சௌராஷ்ட்ரர் ஆன எம்.வி.வெங்கட்ராம். அப்படியா ஒதுக்கம் காட்டி நிற்கிறார்கள்? சென்ற பதிவில் இதற்கொரு பார்வை இருக்கிறது 
இன்னும் மூன்று கதைத்தொகுதிகள் கடந்து வந்திருக்கிற தூரத்தை வெளிக்கொணர ஒரு நெடிய ஆய்வு தான் செய்ய வேண்டும்.செய்ய முயல் வேன்.திலீப் குமார் முழுவதையும் அறிமுகமோ ஆய்வோ  செய்யும் ஆர்வம் பிறக்க வைக்க இது ஒரு முன் மொழிதல் மட்டுமே.[தொடரும்]

Sunday, 26 June 2016

திலீப்குமார் என்ற எழுத்தாளர்

                                

ஜெயகாந்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு ஒரு முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிலளிக்கையில்  
. என்ற  மற்றொரு கேள்விக்குப் பணிவோடு பதில் அளிக்கிறார். 
...The post-Independence fifties, the decade of a young nation filled with hopes and aspirations, saw a proliferation of magazines which not only drew in new writers but also spawned many a new kind of writer, subscribing to the spirit of the magazine he/she wrote for. Writer Jayakanthan’s appearance and growth is demonstrative of this interesting and complex phenomenon. He started his writing career in the 1950s by contributing to left-leaning little magazines and re-emerged a decade later in the popular weekly Ananda Vikatan. His progressive and unconventional themes, his earthy characters from all walks of life and his somewhat dramatic and loud but engaging style captured the imagination of a large readership. The aura of his persona and stories was so intense at the time that it not only reshaped the image of the Tamil writer but also reinterpreted the notions associated with light reading and popular magazines.என்றார்.

Still, you agree Jayakanthan is a personality for  the contribution of Tamil literature? என்ற மற்றொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் மிக்க பணிவோடு சொல்கிறார்.
 In any case how can any one be very impolite to his elementary school teacher ?  JK is like an exam hall ticket. You need it to enter the exam hall. But once you are in it is only a piece of paper. Nevertheless it has its own value.  

 கோவையில்  ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தன் அனுபவங்களையும், தான் சந்திக்க நேரும் மனிதர்களைப் பற்றியும் தொடர்ந்து சிறுகதைகளாக கணையாழி போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வியாபார நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்த குஜராத்திக் குடும்பங்களையும், அவர்கள் சமுதாயத்தில் நிலவும் வறுமை, முதுமை போன்ற எண்ணற்ற தமிழ் நாட்டில் வாழும் குஜராத்திகளின் உலகை திலீப்பின் சிறுகதைகள் பலவும் நமக்குச் சித்தரிக்கின்றன. 
ஒரு முக்கிய விஷயத்தை நாம் நினைவு கூறவேண்டும். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களுக்கு வந்தவர்கள் ஒரு தனித்த தீவாக தமக்குள் சமூக உறவு வட்டத்தை அமைத்துக் கொள்வார்கள். அங்கே என்ன நடக்கிறது? அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்குள்ளும் மனித உறவுப் பிரச்சினைகள் இருக்கும் என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. அப்படி அவர்கள் வெளிப்படமாட்டார்க. அந்த சமூகத்தைச் சார்ந்த தமிழில் எழுதத்  தெரிந்த ஒருவர் மூலமே நம்மால் அவர்கள் பற்றி  அறிய முடியும் . நானும் என் வாசக அனுபவமும்  இப்படி ஒரு தமிழர் அல்லாத பிற ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பது குறித்து [கி.ராஜநாராயணன் கூட தெலுங்கர் பற்றி இவ்வளவு கூரிய சமூகப் பார்வை தரவில்லை] இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் பிரதிபலித்த  எழுத்துக்களை வாசித்ததில்லை. திலீப் குமார் குஜராத்திகள் பற்றி மட்டுமின்றி மராட்டிகள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பல சமூகத்தினரை ஒரு ரியாலிஸ உணர்வோடு பிரதிபலிக்கிறார் அந்த வகையில் திலீப் குமார் ஒரு தனிச் சிறப்பு பெறுகிறார். சினிமாக்களில் காண்பிக்கப் படும் செயற்கையான குஜராத்திய சமூகம் வேறு. [பெரும்பாலும் மார்வாடிகளையும் பட்டாணியர்களையும்  தான் தமிழ் சினிமா வெளிக் காட்டி யிருக்கிறது.குஜராத்திகளை அல்ல.  அதுவும் ஈவிரக்கமற்ற பணம் சம்பாதிப்பது தவிர வேறு ஏதும் அறியாத மனிதர்களாக அவர்கள் சித்தரிக்கப் படுவார்கள்] யதார்த்தத்தில் அவர்களுக்கு ஏற்படும் சமூக, உளவியல் பிரச்சினைகள் வேறு என்பதை இவரது சிறுகதைகள் விளக்குகின்றன.
தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படித்தவுடன் மறந்து விடக் கூடிய பொழுதுப் போக்குக் கதைகள் அல்ல அவை. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை. 
மனித உறவு என்ற பொத்தாம் பொதுவான  சிமெண்ட்டுப் பூச்சில் அடங்கிவிடுவன அல்ல அவர்  கதைகள். கருத்தும் வேதனையும் விமர்சனமும் அடியில் ஓடும் அருவி போல மௌன அளவில் மிகவும் undertoneல் சொல்கிற கதைகள் அவை. 
கோவையில் இவரது சிறு வயது அனுபவங்களும் இவர் பழக நேர்ந்த மனிதர்களும் இவரது கதைகள் வாயிலாக நமக்கு அறிமுகப் படுத்தப் பட்டு நம்மால் மறக்க இயலாத மனச் சித்திரங்களையும், உணர்வுகளையும் அளிக்கின்றன.  இவரது கதை மாந்தர்களாக வரும் பாத்திரங்களின் மனிதாபிமானங்களும், தீர்வுகளும் நம்முள் ஆழ்ந்த விவாதத்தையும், சிந்தனைகளையும் கிளர்ந்தெழச் செய்பவை.[தொடரும்]

Saturday, 25 June 2016

திலீப்குமார் என்ற மனிதர் -1

                                                                            
திலீப்குமார்
...நாம் மனிதர்கள், நாம் கள்ளமற்றவர்கள், உழைப்பு செயல் லட்சியம் இலக்கு போன்ற வார்த்தைகள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த வசீகரம், இந்தக் கவர்ச்சி, இந்த மாயை நமக்குத் தேவையாக இருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை இவ்வாழ்க்கைக்கு வழங்கிவிட நாம் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறோம்.  அதற்காகக் கோபப்படுகிறோம். போராடுகிறோம். கொலை செய்கிறோம். மடிந்துபோகிறோம். நமக்கு எப்போதும் பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நீளத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து இல்லாத இலக்குக்கு இரையாகிப்போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான முனையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள். மீண்டும் புதிதான கோபங்கள், புதிதான போராட்டங்கள், புதிதான கொலைகள், புதிதான சாவுகள், ஏமாற்றங்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. அவை தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய நம்பிக்கையைத் தன் மடியில் சுமந்தே வருகிறது. அதைப் போன்றே ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு புதிய ஏமாற்றத்தை”
-ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் சிறுகதையில் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
பிராக்மாடிஸம் என்ற வாழ்க்கைப்போக்கை ஏற்றுள்ள அமெரிக்க சமூகத்தோடு முரண்பாடு கொண்டது இந்திய தரிசன முறை.அதற்கு கிட்டத்தட்ட ஒத்துப் போவது மேற்குறித்த சிந்தனை. இந்த மனப்போக்கு கொண்ட எழுத்தாளர் தீலீப் குமார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் என்றதும் நம் அனைவருக்கும்... ஏன் உலக மானுடத்துக்கே உரைகல் பொன்னாக விளங்கிய மஹாத்மா காந்தி நினைவு தான் வருகிறது. பிறகு வல்லப பாய் படேல். பிறகு மொரார்ஜி, தற்போது நரேந்திரமோடி. பொதுவாகக் குஜராத்திகள் அனைவரிடமும் அவர்கள் சமாதான விரும்பிகளாகத் தென்பட்டாலும்  எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்கள்.கொண்ட கொள்கைகளில் இருந்து அவ்வளவு லேசில் விட்டுக் கொடுக்காதவர்கள், வாழ்வோ சாவோ உறுதியாகப் போராடிப் பார்ப்போம் என்ற எண்ணம் உள்ளவர்கள். வைஷ்ணவமும் ஜைனமும் பின்னிப்பிணைந்து உருவானது தான் குஜராத்திப் பண்பாடு. எந்த இலக்கியவாதியின் CONTRIBUTIONம் அவனது MINDSET ஐ உருவாக்கிய பண்பாட்டுப் பின்புலத்தை வெளிப்படுத்திவிடும்  
திலீப் குமார் என்ற மனிதரைப் புரிந்து கொள்வதும் திலீப் குமார் என்ற தமிழ் எழுத்தாளரை அறிந்து கொள்ளவும் இந்தப் பின்னணியை நினைவில் வைப்பது முக்கியம்.குஜராத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இடம் பெயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் தீலீப் குமார் . சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர் 
தான் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடக்கும் என்று உணர்ந்து குடும்பப் பொறுப்பைச் சுமக்க ஆரம்பித்திருக்கிறார். கடைகளில் வேலைக்குச் சென்று உழைத்துக் கொண்டிருந்த பொழுதே அவருக்கு புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் தணியாத காதல் பிறந்திருக்கிறது. முறையான கல்வி கிடைக்கவில்லை. தாய்மொழியும்  தமிழ் இல்லை செய்யும்  வேலைகளில்  ஓய்வில்லை.
இதற்கு மத்தியில்  தமிழில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வழக்கம் எப்படி வந்தது என்பது என்பது ஓர் அதிசயம் தான். ஓர் எழுத்தாளனாவது ஒரு தற்செயல் அல்லது அருள் என்றால் ஒரு நல்ல வாசகனாவது ஒரு நல்ல சித்தி என்று தான்  கூற வேண்டும். தமிழ்க் கிராமீய சிந்தனையில் கூறப்போனால் அதற்கு தலையில் எழுதி இருக்கவேண்டும்.தலையெழுத்து.
கோவையில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல இலக்கியங்களைத் தேடிப் பிடித்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். முழுக்க தன் சுய முயற்சியின் மூலமாக மட்டுமே நல்ல இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். திலீப் குமார் வேலை பார்த்த  ஜவுளிக் கடை முதலாளி தினமும் தேநீர் அருந்துவதற்காக  சொற்ப பைசாக்களை அளிப்பார். அதைத் தேநீர் வாங்கிக் குடிக்காமல்  சேர்த்து வைத்து புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கிறார். தனது ஆத்மீகத் தேடலுக்காக புற இச்சைகளை அகற்றிவைக்கும் பண்பு அப்போதிருந்தே அவரிடம் தொடங்கி இருக்கிறது.  தணியாத இலக்கிய ஆர்வம் இவரை  புத்தகங்களையும் நல்ல எழுத்தாளர்களையும் தேடித் தேடிப் படிக்கத்  தூண்டியிருக்கிறது . வாசிப்பிலும் எழுத்திலும் அவரது சூழல் ஏற்படுத்திய அனுபவத்தையும் தாக்கத்தையும் அதன் காரணமாக அவருள் தூண்டப் பட்ட எழுத்தார்வத்தையும் பல சம்பவங்களைச் சொல்லி ஒரு பேட்டியில் விவரித்திருக்கிறார் .
ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ஞானரதம் மாத இதழை ஜெயகாந்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்ட தீலீப்குமார் அந்த புத்தகத்தை வாங்க இயலாமல் அட்டைப் படத்தைப் பார்த்தே படிக்க ஏங்கிய நாட்கள் உண்டு.. ஜெயகாந்தனைப் போலவே அடித்தட்டு மக்களுடன் நன்கு பழகிய அனுபவம் இவருக்கு உண்டு. அவர்களது உலகத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தனக்கும் ஏற்பட்டதற்கு  ஜெயகாந்தனின் எழுத்துக்கள் ஒரு காரணம்.கூறுகிறார். கூர்மையாகப் புறவுலகத்தை கவனித்தல் , எளிமையான மொழி நடை, மனிதர்களின் நுட்பமான மனம் பற்றிய தெளிவான பார்வைதீலீப்குமாருக்குக் கைவந்தவை. அவரிடம் பேசும்போதே நம்மைப் பற்றிய விவரங்களை அவர் நம்மையறியாமல் கணித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியும்  வலிந்து ஹாஸ்யம் எழுதாமல் இயல்பாக, மென்மையாக, கோமாளித்தனம் செய்யாமல் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் போக்கு இவருடையது தாம் கண்டதை, கவனித்து உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றி  தமிழில் சிறுகதையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் 
பொதுவாக குஜராத்திகள், அதுவும் அயல் மொழி பேசும் மாநிலத்தில் வந்து குடியேறிய குஜராத்திகள், நாலு காசு சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதனாக உயர வேண்டும் என்று கருதுவது தான் நடைமுறை. இதில் திலீப் மாறுபட்டது ஒன்றே இவர் மாறுபட்ட மனிதர் என்று வெளிப்படுத்தும்.
[தொடரும்]